குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தொப்பி வாங்கிய கடையில் விசாரணை
குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தொப்பி வாங்கிய கடையில் விசாரணை
ADDED : ஏப் 01, 2024 02:40 AM

சென்னை: 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தொப்பி வாங்கிய சென்னை சென்ட்ரல் பகுதியில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில், மார்ச் 1ல் குண்டு வெடித்தது.
இது தொடர்பாக, அதே மாநிலத்தைச் சேர்ந்த முஸவீர் ஹுசைன் ஷாகிப், 30; அப்துல் மதீன் அகமத் தாஹா ஆகியோரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இவர்கள் குறித்து துப்பு கொடுத்தால், தலா 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இவர்களின் கூட்டாளி முஸம்மில் ஷெரீப் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குண்டு வெடிப்புக்கு முன்னரும், பின்னரும், முஸவீர் ஹுசைன், அப்துல் மதீன் அகமத் தாஹா ஆகியோர், சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இவர்கள், சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் தொப்பி ஒன்றை வாங்கி உள்ளனர்.
அந்தக் கடையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதி முழுதும் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், குண்டு வெடிப்பு குற்றவாளிகள் அந்த இடத்தில் 40 நிமிடம் இருந்தது தெரிய வந்துள்ளது. அதேபோல, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கும் சென்றுள்ளனர்; புத்தாடைகள் வாங்கி உள்ளனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சென்னைக்கு வருவது புதிது அல்ல என, அவர்களின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. இதனால், சென்னையை மையப்படுத்தி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம்' என்றனர்.

