வெளிநாடுகளுக்கு தப்பிய மோசடி நிதி நிறுவன இயக்குநர்கள்; பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
வெளிநாடுகளுக்கு தப்பிய மோசடி நிதி நிறுவன இயக்குநர்கள்; பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
UPDATED : மார் 03, 2025 10:44 AM
ADDED : மார் 03, 2025 06:20 AM

சென்னை : நிதி நிறுவன மோசடி வழக்குகளில் சிக்கிய முக்கிய இயக்குநர்கள் பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதால், விசாரணையில் தேக்கம் ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை உட்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த, ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், 2 லட்சம் முதலீட்டாளர்களிடம், 14,000 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்துஉள்ளன.
ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி உஷா; ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குநர்கள் லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர்.
இவர்களில், ராஜசேகர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், 2023 டிசம்பரில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை தமிழகம் அழைத்து வர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஓராண்டாகியும் பலன் கிடைக்கவில்லை.
சமீபத்தில், தாய்லாந்து தலைநகர் பாங்காகில் இருந்து, நாடு கடத்தப்பட்டு, மேற்குவங்கம் வந்த ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டார். ஆனால், ராஜசேகர் மனைவி உஷா பதுங்கி இருக்கும் இடம் குறித்து துப்பு துலக்க முடியவில்லை.
அதேபோல, ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்கள் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர், எந்த நாட்டில் இருக்கின்றனர் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், நிதி நிறுவன மோசடி வழக்குகள் விசாரணை, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பணத்தை திருப்பித் தர முடியாத நிலை நீடிக்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு தப்பிய நபர்களை, இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் வாயிலாக தேடி வருகிறோம் என, ஆண்டு கணக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து வருகின்றனர். கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவிக்கிறோம். போலீசார் முக்கிய நபர்களை தப்பிக்க விடுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.