அ.தி.மு.க., நிர்வாக இயக்குனரா பழனிசாமி? கவர்னரை சந்தித்த பின் ஹெச்.ராஜா கேள்வி
அ.தி.மு.க., நிர்வாக இயக்குனரா பழனிசாமி? கவர்னரை சந்தித்த பின் ஹெச்.ராஜா கேள்வி
ADDED : செப் 02, 2024 03:31 AM

சென்னை: ''அ.தி.மு.க.,விற்கு சேர்மன் ஆகவும், நிர்வாக இயக்குனராகவும் பழனிசாமி செயல்படுகிறாரா,'' என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
அரசியல் தொடர்பான உயர் கல்வி படிப்பதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, லண்டன் சென்றுள்ளார். நவம்பர் மாதம் வரை அங்கு கல்வியை தொடரவுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில், பா.ஜ., தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, ஆறு பேர் கொண்ட குழுவை, அக்கட்சி தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார்.
அதன் ஒருங்கிணைப்பாளராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட்டு உள்ளார். கவர்னர் ரவியை நேற்று, ஹெச்.ராஜா சந்தித்து, ஒன்றரை மணி நேரம் பேசினார்.
பின், ஹெச்.ராஜா அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, செந்தில் பாலாஜி ஊழல்வாதி என முதல்வர் ஸ்டாலின் முத்திரையிட்டு சான்றளித்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்றும் கூறினார். அது தற்போது நடக்கிறது. ஆண்டவனே அதை நடத்தி காட்டியுள்ளார்.
கார் பந்தயம் விளையாட நினைப்பவர்கள் விளையாடுகின்றனர். அதில், பங்கேற்பவர்களுக்கு என் வாழ்த்துகள்.
நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே பணிகளுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், 10.6 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், 2004 முதல் 2014 வரையிலான காங்., ஆட்சியில் குறைந்த நிதிதான் வழங்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பர். ஊழலையும், கையாளாகாத தனத்தையும் மூடி மறைக்க, மத்திய அரசு மீது குறை கூறுகின்றனர்.
பா.ஜ., கார்ப்பரேட் வடிவில் நிர்வாகிகளை நியமித்துள்ளதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால், அ.தி.மு.க.,விற்கு சேர்மன் ஆகவும், நிர்வாக இயக்குனராகவும் பழனிசாமி செயல்படுகிறாரா என்பதையும் அவர் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.