ADDED : மே 14, 2024 05:43 AM

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிவிப்பு:
தென் மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மற்ற சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் மற்றும் 17ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 18, 19ம் தேதிகளில் மிதமான நிலையில் கோடை மழை இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மாவட்டங்களில் கோடை மழை தீவிரமடைந்து இருந்தாலும், உள் மாவட்டங்களில் பல இடங்களில் வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

