நீதிபதி சந்துரு பரிந்துரை: வி.எச்.பி., எச்சரிக்கை
நீதிபதி சந்துரு பரிந்துரை: வி.எச்.பி., எச்சரிக்கை
ADDED : ஜூன் 21, 2024 07:29 AM

மதுரை : 'தமிழகத்தில் ஜாதியை ஒழிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அமல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும்' என விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,) அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., அரசு பதவிக்கு வந்தது முதல் ஹிந்து மத விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் தி.மு.க., அரசு ஹிந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தினசரி பூஜைகள் நடக்க நிதி வழங்க மறுக்கும் தி.மு.க., அரசு, கோயில் பூஜாரிகளுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை.
இந்நிலையில் ஜாதி, மதக்கலவரங்களை ஒழிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் கமிஷனை அமைத்து அதனிடமிருந்து ஒரு அறிக்கையையும் பெற்றுள்ளது. அதில் மாணவர்கள் விபூதி பூசக் கூடாது, கோயில் திருவிழாக்களுக்கான காப்பு கயிறு கட்டக்கூடாது உள்ளிட்ட ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு அவற்றை அமல்படுத்தக் கூடாது.தவறினால் தமிழகம் முழுவதும் வி.எச்.பி., சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.