இளம்பச்சை வண்ண பட்டாம் பூச்சிகள்: முதுமலையில் வியப்பு
இளம்பச்சை வண்ண பட்டாம் பூச்சிகள்: முதுமலையில் வியப்பு
ADDED : ஜூன் 11, 2024 04:32 AM

கூடலுார் : நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள், பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். அதேபோன்று, சீசன் காலங்களில் கூட்டம், கூட்டமாக பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில், முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தற்போது, இளம்பச்சை, மஞ்சள் வண்ணத்திலான பட்டாம் பூச்சிகள் கூட்டம், கூட்டமாக பறந்து செல்கின்றன. இதன் அழகை சுற்றுலா பயணிகள் வியப்புடன் ரசித்து செல்கின்றனர்.
ஊட்டியில் உள்ள பட்டாம் பூச்சி ஆர்வலர் டாக்டர் ஜீவித் கூறியதாவது:
தமிழகத்தில், 327 வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளன. அதில், நீலகிரியில், 320 வகைகள் உள்ளன. பெரும்பாலான பட்டாம்பூச்சிகளை முதுமலை சுற்றுப்புற பகுதிகளில் காண முடியும்.
தற்போது, பருவமழை துவங்கி உள்ள நிலையில், 'காட்டாப்சீல்யா போமோனா' எனப்படும் கொன்னை வெள்ளையன் பட்டாம் பூச்சிகள் கூடுகளில் இருந்து வெளியே வரும். ஈரமண்ணில் உள்ள உப்பு சத்தை உட்கொண்டு, மழை வருவதற்கு முன்பு, அடுத்த பகுதிக்கு இடம் பெயரும். இவை இளம்பச்சை நிறத்தில் காணப்படும். இதபோல மற்ற வகை பட்டாம் பூச்சிகளையும் இந்த சீசனில் அதிகளவில் காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.