அடிமையாக இருக்க மாட்டோம் தன்மானம் தான் முக்கியம்: இ.பி.எஸ்.,
அடிமையாக இருக்க மாட்டோம் தன்மானம் தான் முக்கியம்: இ.பி.எஸ்.,
ADDED : செப் 07, 2024 06:57 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் நம்பிக்கை பேச்சு என்ற வகையில் ஒருவர் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார். அவர், அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்ததாலேயே அவரை பள்ளிகளில் பேச அனுமதித்துள்ளனர். அந்த வகையில், அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்து வீடியோ ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டிய நபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருவதாக பெருமைபட்டுக் கொள்கின்றனர். அது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் கார் பந்தயம் நடத்தி மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவது இல்லை. ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை. விளையாட்டுத் துறை அமைச்சர் கஜானாவை காலி செய்து வருகிறார்.
அ.தி.மு.க.,வுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அவர் விரும்பினால் மட்டும் போதுமா? பா.ஜ., தலைவராக இருப்பவர், அ.தி.மு.க., தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?
அதிகாரத்துக்கு என்றுமே நாங்கள் அடிமையில்லை. எங்களுக்கு என மரியாதை, தனித்துவம் உள்ளது. எங்கள் கட்சி தலைவர்களைப் பற்றி அவதுாறாக பேசுகின்றனர். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றி - தோல்வி என்பது வேறு. தன்மானத்தை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிட்டு, எங்கும் இறங்கிப் போகத் தேவையில்லை. எங்கிருந்தாலும், தன்மானம் தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.