ADDED : ஏப் 26, 2024 02:24 AM
சென்னை:'உணவு பொருட்களுடன், திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும், உணவு வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என, உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்மீனா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக, உறைதல் தன்மையுள்ள பொருட்களான, பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில், உறைதல் பணியை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.
திரவ நைட்ரஜனை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் ஒழுங்குமுறை 2011ன்படி, 'பேக்கிங் காஸ்' மற்றும் உறைதலுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.
எனவே, பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன், திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

