ஏர்போர்ட்டில் பரிசோதனை கட்டாயம்: சுப்பிரமணியன் ஆய்வு
ஏர்போர்ட்டில் பரிசோதனை கட்டாயம்: சுப்பிரமணியன் ஆய்வு
ADDED : ஆக 22, 2024 02:35 AM

சென்னை:''தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. புதிதாக கண்டறியப்பட்டால், கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, சென்னை விமான நிலையத்தில், குரங்கு அம்மை நோய் பரிசோதனை செய்யப்படுவதை, அமைச்சர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
எச்சரிக்கை
பின், அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணியரை பரிசோதிக்க, 'மாஸ் பீவர் ஸ்கிரீனிங்' கருவி நிறுவப்பட்டுள்ளது. பயணியர் யாருக்காவது தொற்று நோய் அறிகுறி இருந்தால், இந்த கருவியில் சிவப்பு விளக்கு எரியும்; ஒரு எச்சரிக்கை அலாரமும் ஒலிக்கும்.
அறிகுறிகள் யாருக்கும் இல்லை எனில், பச்சை விளக்கு எரியும்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை.
முடிவு
புதிதாக கண்டறியப்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்தி, கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை மேற்கொள்ளப்படும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்கப்படுவர்.
ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணியர் பலர், இணைப்பு விமானங்களில் வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், அனைத்து சர்வதேச விமான பயணியரையும் பரிசோதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.