கோடையால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஆவின் கொள்முதல் 54,000 லிட்டர் சரிவு
கோடையால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஆவின் கொள்முதல் 54,000 லிட்டர் சரிவு
ADDED : மே 04, 2024 01:19 AM
தமிழகத்தில் வாட்டி வதைக்கும் கோடை வெயிலால், மனிதர்களுக்கு ஏற்படும் பலவித பாதிப்புகளை போல கால்நடைகளுக்கும் வெப்ப அழுத்தம் ஏற்பட்டு உள்நாட்டு மாடுகள், கலப்பின மாடுகளில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில், ஆவின் தினம் கொள்முதல் செய்யும் பால் அளவு குறைந்துள்ளது.
ஏப்ரலில், 27.31 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் மே மாதம், 27.19 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பால்கோவா, ஐஸ்கிரீம், பால் சார்ந்த இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
வெயிலால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. தலா, 10 லிட்டர் கறக்கும் மாடு, வெயிலால், 3 லிட்டர் வரை தான் கறக்கிறது. பசுந்தீவனம், தண்ணீர் பற்றாக்குறையும் பால் உற்பத்தி குறைவுக்கு காரணம். கடந்த ஏப்ரலில் சேலத்தில், 4.81 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், மே மாதம், 4.77 லட்சம் லிட்டர் என, 3,800 லிட்டர் வரை குறைந்துள்ளது.
அதேபோல், 27 ஒன்றியங்களிலும், ஏப்., 30ல், 27.31 லட்சமாக இருந்தது. மே, 1ல், 27.19 லட்சம் என, 11,000 லிட்டர் குறைந்துள்ளது. ஒரு மாத அளவில், 54,980 லிட்டர் குறைந்துள்ளது.
கடந்த, 2023 மே மாதம், 29.44 லட்சம் லிட்டராக இருந்த கொள்முதல், 2024 மே மாதம், 27.19 லட்சம் லிட்டர் என, 2.24 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆவின் நுகர்வோருக்கு, தீவனத்துக்கு மானியம் போன்றவை வழங்காததால் பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால், ஆவின் பால் பாக்கெட், அதன் சார்ந்த பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் அலுவலர்கள் கூறுகையில், 'வெப்ப சலனத்தால் கறவை மாடுகள் தீவனம் எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்து, பால் சுரப்பும் குறைந்துள்ளது. சேலம், தர்மபுரி, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடப்பாண்டில் கூடுதல் வெப்ப நிலை காணப்படுகிறது. கோடை வெயில் தாக்கத்தால் ஆவினுக்கு பால் கொள்முதல் சற்று குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் பாக்கெட் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை' என்றனர்.
-நமது நிருபர்-