ADDED : ஜூன் 24, 2024 11:58 PM
சென்னை: “எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்குள் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன்,” என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ.,க்கள் பலரும், தங்கள் பகுதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில்:
எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் தடுப்பணை அமைத்து, தண்ணீரை தேக்கி, விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீர் உபயோகத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், கூடுதலான முறையில் தடுப்பணை கட்ட முயற்சிக்கிறோம்.
உறுப்பினர்கள் கேட்கும் பகுதியில், எந்தெந்த இடங்களில் தடுப்பணை கட்ட முடியும் என்று ஆய்வு செய்து, முதல்வருடன் பேச உள்ளேன். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குள், உறுப்பினர்கள் குறிப்பிடும் தடுப்பணைகளை கட்டி முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.