ADDED : ஏப் 09, 2024 06:04 AM
சென்னை : கடலுார் மாவட்டம் நெய்வேலியில், மத்திய அரசின் என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, பல அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 1,740 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பழுப்பு நிலக்கரி கிடைப்பதில் சிரமம், பழுது உள்ளிட்ட காரணங்களால், என்.எல்.சி., மின் நிலையங்களில் முழு அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால், தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ள மின்சாரமும் முழுவதுமாக வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், தமிழக மின் வினியோகம் தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் சிவதாஸ் மீனா நேற்று மின் வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அவர், என்.எல்.சி., அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, தமிழகத்திற்கு ஒதுக்கிய மின்சாரத்தை முழுவதுமாக பெற நடவடிக்கை எடுக்குமாறு, மின் வாரிய அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை என்.எல்.சி., அதிகாரிகளுடன் கூட்டம் நடத்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

