என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டத்துக்கு 17 வரை தடை
என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டத்துக்கு 17 வரை தடை
ADDED : ஆக 15, 2024 12:24 AM
சென்னை:நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், வரும் 17ம் தேதி வரை போராட்டத்துக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து, என்.எல்.சி., நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், விசாரணைக்கு வந்தது. நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தொழிலாளர் நீதிமன்றத்தில், இந்தப் பிரச்னை நிலுவையில் உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் சமசர பேச்சு நிலுவையில் உள்ளது' என்றார்.
தொழிற்சங்கம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, ''பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகம் நிறைவேற்றவில்லை. 13,000 ஊழியர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர்.
வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமை; போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை,'' என்றார்.
இந்த வழக்கில் இரு தரப்பிலும் வாதங்கள் முடியாததால், விசாரணையை, நாளைக்கு நீதிபதி செந்தில்குமார் தள்ளி வைத்தார். 'வரும் 17ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' எனவும் தொழிற்சங்கத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.