ADDED : மார் 27, 2024 06:10 AM

-சென்னை : தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்ரல், 19ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல், கடந்த 20ம் தேதி துவங்கியது.
அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படாததால், வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. முதல் நாளில் 22 பேர்; இரண்டாவது நாளில் ஒன்பது பேர்; மூன்றாம் நாளில், 47 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், 23, 24ம் தேதிகளில் மனுத்தாக்கல் நடக்கவில்லை.
அதற்குள் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். தி.மு.க., வேட்பாளர்களில் ஒரு சிலர் இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்றும் பலர் மனு தாக்கல் செய்தனர். இன்று மதியம் 3:00 மணியுடன் மனுத்தாக்கல் நிறைவடைகிறது. மதியம் 3:00 மணிக்குள், மனுத்தாக்கல் செய்ய வருகிறவர்களுக்கு, 'டோக்கன்' வழங்கப்பட்டு கதவு மூடப்படும். டோக்கன் பெற்றவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பின், வருவோரை அனுமதிக்கக் கூடாது என, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
இன்று அரசியல் கட்சி வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் அதிக அளவில் மனுத்தாக்கல் செய்வர். அரசியல் கட்சியினர், பூத் ஏஜன்டுகளாக தங்கள் ஆட்கள் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியினரை சுயேச்சை வேட்பாளர்களாக, அதிக எண்ணிக்கையில் களம் இறக்குவர்.
எனவே, இன்று மனுத்தாக்கல் விறுவிறுப்பாக இருக்கும்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி உட்பட பலர் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், நேற்று வரை 700க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற, மார்ச் 30ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பதிவு பெற்ற கட்சிகளில், சில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சில கட்சிகளுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படாமல் உள்ளது. ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, இன்று காலை 9:00 மணிக்குள் முடிவெடுக்க, தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு மார்ச் 30ல் சின்னம் ஒதுக்கப்படும்.

