ஓடையில் பஞ்சாயத்து தலைவி வீடு 12 வாரங்களில் அகற்ற ஆணை
ஓடையில் பஞ்சாயத்து தலைவி வீடு 12 வாரங்களில் அகற்ற ஆணை
ADDED : ஆக 04, 2024 01:01 AM
சென்னை:ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பஞ்சாயத்து தலைவி கட்டிய வீட்டை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் சத்துவாச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
வேலுார் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக, பாலாறு உள்ளது. அணைக்கட்டு தாலுகாவில் பள்ளிகொண்டா கிராமத்தில், மூன்றுக்கும் மேல் கால்வாய்கள் உள்ளன.
இவற்றில் வரும் மழை நீர், அய்யாவு நகர் வழியாக அருகில் உள்ள ஏரியிலும், பாலாறிலும் சேர்கிறது. அய்யாவு நகரில் தண்ணீர் செல்லும் பாதையில், பள்ளிகொண்டா பஞ்சாயத்து தலைவி சுபபிரியா, அவரது கணவர் உள்ளிட்டோர் வீடு கட்டி உள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பால், மழை காலத்தில், கிராமத்தை சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், ஓடை புறம்போக்கு நிலத்தை மீட்கவும் கோரி, வேலுார் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்.
என் மனுவை பரிசீலிக்கவும், ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்றவும், கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜரானார். அணைக்கட்டு தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவில், சுபபிரியா உள்ளிட்ட 8 பேர், தண்ணீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பஞ்சாயத்து தலைவி சுபபிரியா, அவரது கணவர் அனுமதி யின்றி கட்டியுள்ள கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, 12 வாரங்களுக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளருக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.