
ஏப்ரல் 11, 1906
காஞ்சிபுரத்தில், 1906ல் இதே நாளில், சி.கே.பெத்தசாமி நாயுடு - லட்சுமி தம்பதியின் மகனாக பிறந்தவர் சின்னராஜ் எனும் சி.பி.சிற்றரசு.
இவர், படிப்பை முடித்ததும் நீதிக்கட்சியில் சேர்ந்து அண்ணாதுரையுடன் பணியாற்றினார். அண்ணாதுரை தி.மு.க.,வை துவக்கிய போது அதில் இணைந்தார். 'தீப்பொறி, தீச்சுடர்' இதழ்களின் நிறுவனராகவும் 'இன முழக்கம், நம் நாடு' இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தி.மு.க.,வின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினராக இருந்தார்.
'மாடர்ன் தியேட்டர்ஸ்' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றினார். சட்ட மேலவை உறுப்பினர், அவைத் தலைவர் பதவிகளை வகித்தார். 1970ல், ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்றார்.
அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது அதில் இணைந்தார். 'சரிந்த சாம்ராஜ்யங்கள், போர்வாள், மந்திர மூட்டை' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதினார். ஐரோப்பிய இலக்கியத்தை தமிழில் அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்ட இவர், தன் 72வது வயதில், 1978, பிப்ரவரி 16ல் மறைந்தார்.
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பெயரால் நிலைத்திருக்கும் சிற்றரசு பிறந்த தினம் இன்று!

