
மே 2, 1927
திருச்சியில், மு.நடேசன் - கண்ணம்மாள் தம்பதியின் மகனாக, 1927ல், இதே நாளில் பிறந்தவர் ந.சஞ்சீவி. இவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி, சென்னை பச்சையப்பன் கல்லுாரி, சென்னை பல்கலைகளில் படித்தார்.
பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில், 'புறநானுாற்று ஆராய்ச்சி' எனும் தலைப்பிலும், மு.வரதராசனின் வழிகாட்டுதலில், 'சங்க நுால்களில் அடைவளம்' எனும் தலைப்பிலும் ஆய்வு செய்தார்.
இவர், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லுாரியில் தமிழ்த் துறை தலைவர், சென்னை பல்கலையில் தமிழ் இலக்கியத் துறை தலைவராகவும், பல அமைப்புகளின் பொறுப்புகளையும் வகித்தார். 'வெள்ளையனே வெளியேறு' விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார். 'சுதேசமித்திரன், அமுதசுரபி, கலைமகள்' உள்ளிட்ட இதழ்களில் இலக்கிய, வரலாற்று கட்டுரைகளை எழுதினார்.
தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டும் வகையில், 350க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதினார். 'செந்தமிழ் இலக்கிய செம்மல், சிந்தனை செம்மல்' உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர், தன் 61வது வயதில், 1988, ஆகஸ்ட் 22ல் மறைந்தார்.
செந்தமிழுடன் சித்த மருத்துவத்தையும் பயின்ற தமிழறிஞர் பிறந்த தினம் இன்று!

