
மே 21, 1954
மதுரையை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு மகளாக, 1954ல் இதே நாளில் பிறந்தவர் அனிதா ரத்னம்.இவர், சென்னை, அடையாறு கே.லட்சுமணனிடம் பரதநாட்டியம் கற்றார். சென்னை கலாஷேத்ராவில் கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட நடனங்களுடன், தைச்சி, களரிப்பாட்டு உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தார்.
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பல்கலையில் நாடகம், தொலைக்காட்சி துறைகளில் முதுகலை பட்டம் பெற்றார். தன் கலைத் திறமைகளை ஒருங்கிணைத்து, 'நியோ பாரத் நாட்டியம்' என்ற புதிய பாணியை அறிமுகம் செய்தார்.
அமெரிக்க கவிஞர் ஜாய் ஹார்ஜோ, எழுத்தாளர் ஷோபிதா புஞ்சா, மார்க் டெய்லர், கனடிய கலைஞர் பீட்டர்ஸ் உள்ளிட்டோருடன் இணைந்து பல படைப்புகளை தந்தார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பாய்ஸ் திரைப்படங்களிலும் நடித்தார்.
நடன கலையை மேம்படுத்த, 'அரங்கம் அறக்கட்டளை, நர்த்தகி போர்ட்டல்' ஆகியவற்றை நிறுவினார். 'நிருத்ய சூடாமணி, கலைமாமணி, லலித் கலாரத்னா, நாட்டிய ரத்னா' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது 70வது பிறந்த தினம் இன்று!

