தொழில் வளர்ந்தால் தான், மாநிலம் வளரும்; மக்கள் வாழ்க்கையும் உயரும்!
தொழில் வளர்ந்தால் தான், மாநிலம் வளரும்; மக்கள் வாழ்க்கையும் உயரும்!
ADDED : ஆக 21, 2024 11:48 AM

சென்னை: 'தொழில் வளர்ந்தால்தான் மாநிலமும் வளரும். மக்களின் வாழ்க்கையும் உயரும்' என தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 முடிவுற்ற திட்டங்களை ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அனைத்து துறை வளர்ச்சி என்பது அனைத்து சமூக வளர்ச்சி ஆகும். 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் நாம் ஈர்த்த முதலீடுகள் தான் நமது வெற்றிக்கு காரணம்.
முதலீட்டாளர்கள் நிம்மதி
2030ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டாலர் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல் படுகிறது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பது உலகிற்கு தெரியும். பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலத்தில் பெண்களுக்காகவே பல்வேறு திட்டங்கள் உள்ளன. தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்ற மனநிலை முதலீட்டாளர்களுக்கு வந்துள்ளது. தொழிலதிபர்கள் தமிழகத்தின் தூதுவராக மாறி மற்றவர்களை முதலீடு செய்ய அழைத்து வர வேண்டும்.
முதலீட்டாளர்கள்
தொழில் வளர்ந்தால் தான் மாநிலமும் வளரும். மக்களின் வாழ்க்கையும் உயரும். புரிந்துணர்வு போடப்பட்டதும் நமது கடமை முடிந்ததாக கருதவில்லை. ஒப்பந்தத்துடன் முடித்துக் கொள்ளாமல், தொழில் துவங்க அனைத்து உதவிகளும் முதலீட்டாளர்களுக்கு செய்யப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் நாள் இன்று. தமிழக இளைஞர்களின் திறமையை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தொழில் துவங்குவதன் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.