ADDED : செப் 10, 2024 06:10 AM
சென்னை : அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனு:
இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 2018ல் படப்பிடிப்பு துவங்கி, 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. படத்தின் நாயகனாக உதயநிதியும், நாயகியராக ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் நடிகர் யோகிபாபு நடித்துஉள்ளனர்.
இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழலில், ஏஞ்சல்படத்தை முடிக்காமல், மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்தார். அந்த படம் கடைசி என்றும், உதயநிதி கூறியுள்ளார். ஏஞ்சல் படத்துக்காக, 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள், 'கால்ஷீட்' தராமல் புறக்கணித்து வரும் உதயநிதி, படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். இழப்பீடாக, 25 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என, உதயநிதி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது.
உதயநிதி மனுவுக்கு பதிலளிக்க, ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணனுக்கு உத்தரவிட்டு, வரும் 23க்கும் விசாரணையை, நீதிபதி தள்ளிவைத்தார்.

