மாரடைப்பால் இறந்தவர் மனைவிக்கு ரூ.71 லட்சம் காப்பீடு வழங்க உத்தரவு
மாரடைப்பால் இறந்தவர் மனைவிக்கு ரூ.71 லட்சம் காப்பீடு வழங்க உத்தரவு
UPDATED : மே 26, 2024 06:44 AM
ADDED : மே 26, 2024 01:24 AM

சென்னை:மாரடைப்பால் மரணம் அடைந்தவரின் மனைவிக்கு, 71 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்க, தனியார் நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி; இவரது கணவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.சி.பி., வங்கி கிளையில், 71 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதே தொகைக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பார்டு காப்பீட்டு நிறுவனத்தில், பாலிசி எடுத்து தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதனால், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், மாரடைப்பால் மரணம் அடைந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகை 71 லட்சம் ரூபாய் கேட்டு, அவரது மனைவி லட்சுமி விண்ணப்பித்தார்.
அதை, ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பர்டு காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. 'புலன் விசாரணை நடத்தப்படவில்லை; பிரேத பரிசோதனை நடக்கவில்லை என்பதால், இறப்புக்கான காரணம் தெரியவில்லை' என, காப்பீட்டு நிறுவனம் காரணங்களை கூறியது.
இதையடுத்து, காப்பீட்டு நிறுவனத்தின் உத்தரவை ரத்து செய்து, காப்பீட்டுத் தொகை, 71 லட்சம் ரூபாயை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், லட்சுமி மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் கே.சுரேஷ்பாபு, என்.விஜயராஜ் ஆஜராகினர்.
காப்பீட்டு நிறுவனம் சார்பில், 'இந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல; குறைதீர்க்கும் ஆணையத்தை தான் அணுக வேண்டும். மேலும், மாரடைப்பு, பாலிசி வரம்புக்குள் வராது' என வாதிடப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:
பாலிசி நிபந்தனைகளை பார்க்கும்போது, பாலிசி வரம்புக்குள் மாரடைப்பு வருகிறது. மனுதாரரின் கணவர் மரணம், பாலிசி வரம்புக்குள் வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் அதிகப்படியாக, 'டெக்னிக்கல்' காரணங்களை பார்க்கக் கூடாது.
காப்பீட்டு பாலிசி எடுத்து, பிரிமீயம் தொகையை, மனுதாரரின் கணவர் செலுத்தி உள்ளார். அதனால், டெக்னிக்கல் காரணங்களுக்காக நிராகரிக்கக் கூடாது.
காப்பீட்டு நிறுவனத்தின் பாலிசியில் பயன்படுத்தும் மொழி தெளிவற்றதாக இருப்பதால், அதை புரிந்து கொள்ளும் வகையில் தனிநபர்களுக்கு சட்ட அறிவு இல்லை.
காப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என்ற பொறுப்பை தட்டிக் கழிக்கும் நோக்கில், பாலிசியில் தெளிவற்ற மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. நான்கு வாரங்களுக்குள், காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.