லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து பழனிசாமி 10 நாள் ஆலோசனை
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து பழனிசாமி 10 நாள் ஆலோசனை
ADDED : ஜூலை 06, 2024 05:41 AM

சென்னை : லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அனைத்து தொகுதிகளிலும் இக்கூட்டணி தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., இதுவரை இல்லாத அளவு தென் மாவட்டங்களில் சரிவை சந்தித்துள்ளது.
தொடர் தோல்விகளைத் தடுக்க அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் குரல் எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து லோக்சபா தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க, பழனிசாமி முடிவு செய்துள்ளார். சென்னையில் கட்சி அலுவலகத்தில் முதற்கட்டமாக 26 தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி மாலை 3:30 மணிக்கு காஞ்சிபுரம், 5:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மறுநாள் முதல் தினமும் காலையில் இரண்டு; மாலையில் ஒரு தொகுதி வீதம் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்க உள்ளன.
இக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.