2 அரசு டவுன் பஸ்களில் அச்சு முறிவு: டப்பா வண்டியால் தவித்த பயணியர்
2 அரசு டவுன் பஸ்களில் அச்சு முறிவு: டப்பா வண்டியால் தவித்த பயணியர்
ADDED : ஜூன் 09, 2024 04:51 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டி.என்.68. என்.0427 என்ற டவுன் பஸ், நேற்று காலை பயணியருடன் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள கரந்தை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் அச்சு முறிந்து, பஸ் நகர முடியாமல் நடுவழியிலேயே நின்றது.
நடுவழியில் நின்ற பஸ்
இதனால், பயணியர் இறக்கி விடப்பட்டனர். மேலும், காலை நேரம் என்பதால், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சிலர் மாற்று பஸ்சில் ஏறி சென்றனர்.
அதுபோல, டி.என்.68.எண்.0522 என்ற டவுன் பஸ் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டிற்கு பயணியருடன் காந்திஜி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ்சின் அச்சு முறிந்து, நடுவழியில் பஸ் நின்றது.
இதனால், பயணியர் அவதிக்கு உள்ளாகினர். தகவல் அறிந்து வந்த மெக்கானிக்குகள், இரண்டு பஸ்களையும் டிப்போவுக்கு இழுத்து சென்றனர்.
தஞ்சாவூரில் இயங்கும் அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலானவை, பழைய டப்பா வண்டிகளாகத் தான் உள்ளன.
அவற்றை மாற்ற வேண்டும் என, பயணியர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இன்னமும் நடக்கவில்லை.
போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி., துணைத் தலைவர் மதிவாணன் கூறியதாவது:
தஞ்சாவூரில் இரண்டு டவுன் பஸ் டெப்போக்களில் 110 பஸ்கள் இருந்தன. தற்போது 80 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
டூல்ஸ் கிடையாது
பஸ்களை பராமரிப்பதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். பஸ்களை சீரமைப்பதற்கான டூல்ஸ் போதிய அளவில் கிடையாது.
உதிரி பாகங்கள், பிரேக் ஆயில் உள்ளிட்ட பொருட்களை போக்குவரத்து நிர்வாகம் வாங்கி தருவது கிடையாது.
அவரசமாக பஸ்களை சீர் செய்ய வேண்டும் என்றால், கிளை மேலாளர்கள் தங்கள் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி, சீரமைப்பு செய்கின்றனர். இதே நிலை நீடித்தால், பஸ்களை இயக்குவது கடினமாக மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.