கர்நாடக கவர்னரை கண்டித்து போராட்டம் காங்., அடாவடியால் மக்கள் அவதி
கர்நாடக கவர்னரை கண்டித்து போராட்டம் காங்., அடாவடியால் மக்கள் அவதி
ADDED : ஆக 20, 2024 02:30 AM

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. அங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வரின் மனைவிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ் விசாரணை நடத்த, கடந்த 17ம் தேதி கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார்.
கவர்னரின் இந்த செயலை கண்டித்து, கர்நாடகா முழுதும் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு சுதந்திர பூங்காவில், மாநில காங்., தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஒருமையில் பேசினர். கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரில் காலை முதலே போராட்டம் தீவிரமாக இருந்தது. கவர்னருக்கு எதிராக மட்டுமின்றி, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராகவும் காங்கிரசார் கோஷம் எழுப்பினர். கவர்னர் படத்தை எரித்தனர். சாமுண்டி மலையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், கடைகளை அடைத்து விட்டு, போராட்டம் நடத்தியதால் பக்தர்கள் பூஜை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
ஹாசன் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், டயருக்கு தீ வைக்கப்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த சஞ்சு என்ற மகளிர் ஏட்டு தலைமுடி தீயில் கருகியது. மாநிலம் முழுதும் காங்கிரசார் நடத்திய போராட்டத்தால் பொதுமக்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இப்பிரச்னையில் முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் அக்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

