ADDED : மே 23, 2024 11:46 PM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உயர்ந்தது.
கடந்த ஒரு வாரமாக நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 21.8 மி.மீ., பெரியாறில் 9.6 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 620 கன அடியாக இருந்தது. இதனால் நீர்மட்டமும் உயர்ந்து 116.65 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2024 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு:
அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஜூன் 1ல் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு முன்கூட்டியே விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான அரசாணை வெளியிடுவதற்காக நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.