ADDED : ஜூன் 27, 2024 03:25 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் உரிமமின்றி ரயில் டிக்கெட்டுகளை விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் - கடலுார் ரோட்டில் உள்ள தனியார் வளாக கட்டடத்தில் இணையவழி சேவை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உரிமமின்றி ரயில் பயணச்சீட்டுகள் விற்பதாக விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்துள்ளது.
இதன் பேரில், போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அந்த நிறுவனத்தை சேர்ந்த பார்த்தீபன்,42; என்பவர், எந்தவித உரிமமின்றி தனது தனிப்பட்ட இணையதள முகவரியை பயன்படுத்தி ரயில்வே பயணச்சீட்டுகளை இணையவழியில் பெற்று, அதை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதன் பேரில் பார்த்தீபன் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்து ரூ.9,687 மதிப்புள்ள 3 இணையவழி ரயில் டிக்கெட்டுகள், 3 காலாவதியான ரயில் டிக்கெட்டுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்தனர்.