ஆர்.டி.இ.,யை அமல்படுத்த கோரி மனு: பள்ளி கல்வி துறை பதிலளிக்க உத்தரவு
ஆர்.டி.இ.,யை அமல்படுத்த கோரி மனு: பள்ளி கல்வி துறை பதிலளிக்க உத்தரவு
ADDED : மே 24, 2024 03:50 AM

கோவை : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித் துறை ஜூன் 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டமான, ஆர்.டி.இ.,யை முறையாக அமல்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், பள்ளி கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தமிழக அரசின் விதிகள் தெளிவாக இல்லாத காரணத்தால் இதில் விண்ணப்பிக்கும் பெற்றோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
விண்ணப்பிக்கும்போது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள் இணையதளத்தில் காட்டப்படுகின்றன.
ஆனால், பல இடங்களில் இது குழப்பமாக உள்ளது. இணையதளத்தில் காட்டப்படும் பள்ளிகளைத் தவிர, வேறு அருகில் உள்ள பள்ளிகள் காட்டப்படாததால் பொதுமக்களால் விண்ணப்பிக்க இயலவில்லை.
அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள இடங்கள் பூர்த்தியாகும் வகையில், தெளிவான வசிப்பிடத் தொலைவு விதிகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
பல மாநிலங்களில் சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் அந்தந்த மாநில அரசுகளின் சேர்க்கை இணையதளத்தில் சேர்த்து, அந்தப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
அதனால், தமிழகத்திலும் இணையதளத்தில் இப்பள்ளிகளை சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். விசாரித்த நீதிபதிகள், ஆந்திர அரசை போல தமிழக அரசும் ஏன் விதிகளை பின்பற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினர்.
ஜூன் 4ம் தேதி இதற்கு பதிலளிக்குமாறு, தமிழக அரசு பள்ளி கல்வித் துறைக்கு நேற்று உத்தரவிட்டனர்.