ADDED : ஜூன் 04, 2024 01:22 AM
ராமநாதபுரம்: துாத்துக்குடி பகுதியில் எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மோகன்ராம் 7 மீனவர்களுக்கு ஜூன் 14 வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
துாத்துக்குடி பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் வைபவ் கப்பலில் ரோந்துசென்ற போது எல்லை தாண்டி இந்திய பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
இந்த படகினை பறிமுதல் செய்து அதிலிருந்த 7 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். இலங்கை காலே மாவட்டத்தை சேர்ந்த அம்பலன்கோடா பகுதியை சேர்ந்த ராமுது இண்டிகா திலிப்குமார 42, போக்லே பியால் டி சில்வா 44, கழுத்தோடக நிரங்க லக்மால் 27, கபுகே கியாங்கே தாரக அமிலகுமார 40, சுசாந்தா 39, ராம்புத்ரா சமிந்தா புஷ்ப குமார 37, மாலியா வடு சுபாலி 57, ஆகிய ஏழு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. 7 மீனவர்களுக்கும் ஜூன்14 வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.------