ADDED : மே 05, 2024 12:03 AM

கோவை,:பிரபல யு டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதுாறான கருத்து தெரிவித்திருந்தார்.
அதை சமூக வலைதளத்தில் பார்த்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் எஸ்.ஐ., சுகன்யா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், அவர் தேனியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அங்கிருந்து அவரை போலீசார் வேனில் கோவை அழைத்து வந்தனர். அப்போது தாராபுரம் அருகே வந்த போது, குறுக்கே வந்த கார் மீது போலீஸ் வேன் மோதியது.
இதில், போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கர் காயமின்றி தப்பினார். காரை ஓட்டி வந்த தாராபுரத்தைச் சேர்ந்த கார் மெக்கானிக் லோகநாதன் காயமடைந்தார்.
தாராபுரம் போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மீண்டும் போலீசார் சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து, பல மணி நேரம் விசாரித்தனர்.