'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' ஆள் சேர்ப்பு பின்னணியில் பயங்கரவாதி காஜா
'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' ஆள் சேர்ப்பு பின்னணியில் பயங்கரவாதி காஜா
UPDATED : ஜூலை 04, 2024 05:48 AM
ADDED : ஜூலை 04, 2024 01:38 AM

சென்னை:தமிழகத்தில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு, ரகசிய பயிற்சி அளிக்கப்பட்டதன் பின்னணியில், பயங்கரவாதி காஜாமொய்தீன் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது, ரகசிய பயிற்சி அளித்தது தொடர்பாக, சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த, டாக்டர் ஹமீது உசேன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஈசாக் உட்பட, நான்கு பேருக்கு 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
தொடர் விசாரணையில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்பில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருவதும், இதன் பின்னணியில், சிரியாவில் ஆயுத பயிற்சி பெற்ற பயங்கரவாதி காஜா மொய்தீன், 57, இருப்பதும் தெரியவந்துள்ளது.
சதி திட்டம்
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். அவருக்கு மூன்று மனைவியர், இரண்டு மகன்கள்.
இளையமகனுக்கு பயங்கவரவாதி ஒசாமாவின் பெயரை சூட்டி உள்ளார். ஐ.எஸ்., பயங்கரவாதியான காஜாமொய்தீன், சிரியா சென்று ஆயுத பயிற்சி பெற்றவர். தமிழகத்தில் புதிய அமைப்பு ஒன்றை துவங்கி, சதி திட்டம் தீட்டி வந்தார்.
அந்த அமைப்பில், ஒன்பது பேரை நிர்வாகிகளாக நியமித்து இருந்தார். அவர்கள், ஹிந்து அமைப்பு நிர்வாகிகளை குறி வைத்து கொலை செய்து வந்தனர்.
அந்த வகையில், 2014ல், அம்பத்துார் அருகே, மண்ணுார்பேட்டையைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட ஹிந்து முன்னணி சுரேஷ்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். அதற்கு மூளையாக செயல்பட்டவர் காஜாமொய்தீன். டில்லியில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
தங்கள் இயக்கத்தின் தலைவன் கைது செய்யப் பட்டதால், போலீசார் மற் றும் என்.ஐ.ஏ., அதிகாரி களுக்கு எச்சரிக்கை விடுத்து, காஜாமொய்தீன் கூட்டாளிகள், 2020ல், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சனை கொடூரமாக கொலை செய்தனர்.
சிறை மாற்றம்
திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த காஜாமொய்தீன், தமிழக சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவர் தான் தற்போது, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு விவகாரத்தில் பின்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
அவரது கூட்டாளிகள், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளனர். அவர்கள் காஜாமொய்தீன் கட்டளைப்படி செயல்பட்டு வந்துள்ளனர். விரைவில் அவர்கள் சிக்குவர். காஜாமொய்தீனிடமும் விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.