'அரசியலில் ராகுல் காணாமல் போகும் நாள் விரைவில் வரும்'
'அரசியலில் ராகுல் காணாமல் போகும் நாள் விரைவில் வரும்'
ADDED : மே 30, 2024 10:40 PM
சென்னை:“அரசியலில் இருந்து ராகுல் காணாமல் போகும் நாள் விரைவில் வரும்,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட இருக்கிறார். கோவிலுக்கு சென்று, தியானத்தில் ஈடுபடுவதை யாரால் தடுக்க முடியும். ஜெயலலிதா, தமிழகத்தில் எவ்வளவு ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு இருந்தார்; எவ்வளவு கோவில்களை பராமரித்து கும்பாபிஷேகம் செய்தார்; எத்தனை கோவில்களுக்கு அவர் சென்று இருந்தார் என, அனைவருக்கும் தெரியும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதில், அவர் உறுதியாக இருந்தார்.
'காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான, 370 சட்டப் பிரிவை எப்போது நீக்கப் போகிறீர்கள்' என, ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஜெயலலிதா பேசியதற்கு ராஜ்யசபாவில் ஆவணங்கள் உள்ளன. இதற்கு மேல் என்ன ஆவணங்கள் வேண்டும்?
போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. சென்னையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பலாத்காரம், கஞ்சா; இது தான் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு காரணம்.
மக்கள், 'வெல்கம் மோடி, வெல்கம் மோடி' என்று சொல்கின்றனர். தி.மு.க.,வை சார்ந்தவர்களின் பிரதமர் குறித்தான பேச்சு எந்த அளவிற்கு அநாகரிகமாக இருக்கிறது, தரம் தாழ்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழகத்தில், பா.ஜ., பெரிய வரலாற்றை உருவாக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி அதற்கான முடிவு தெரியவரும். அரசியலில் இருந்து ராகுல் காணாமல் போகும் நாள், விரைவில் வரும். ஜூன் 4ம் தேதி மக்கள் அதை பார்ப்பர்.
இவ்வாறு அமைச்சர் முருகன் கூறினார்.