ரேஷன் 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி பழுது செலவை எங்களிடமே வசூலிப்பதா?
ரேஷன் 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி பழுது செலவை எங்களிடமே வசூலிப்பதா?
UPDATED : மே 04, 2024 06:18 AM
ADDED : மே 04, 2024 05:58 AM

திருப்பூர் : ரேஷன் கடைகளில் பழுதான 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவிகளுக்கு கடை ஊழியர்களிடம் தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவிகள் பயன்பாட்டில் உள்ளது.
கடந்த சில நாள் முன், கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்டங்களின் பொது வினியோக திட்ட துணை பதிவாளர்களுக்கு கடந்த மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அதில், மாவட்ட வாரியாக பழுதான பாய்ன்ட் ஆப் சேல் கருவிகளுக்கு அதை சரி செய்ய செலவிட்ட தொகையை கடை வாரியாக ஊழியர்களிடமிருந்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவ்வகையில், திருப்பூர் மாவட்ட பொது வினியோக திட்ட துணை பதிவாளர் பழனிசாமி, கூட்டுறவு துறை சார் பதிவாளர் மற்றும் முதுநிலை ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், மாவட்டத்தில் உள்ள, 167 ரேஷன் கடைகளில், பழுதான 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவிகள் சரி செய்ய செலவிடப்பட்ட, 32 லட்சம் ரூபாய் ஊழியர்களிடம் வசூலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:இந்த கருவியின் விலை, 5 ஆயிரம் ரூபாய். கருவி வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது. பயன்பாடு காரணமாக பழுதடைந்த கருவிகளுக்கு ஊழியர்களிடம் தொகை வசூலிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதனை ஊழியர்கள் செலுத்த மாட்டார்கள்.
இது குறித்து முதல் கட்டமாக துணை பதிவாளர் அடுத்த கட்டமாக பதிவாளர், செயலாளர் மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும்.
தீர்வு ஏற்படாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டமும் அடுத்த கட்டமாக நீதித்துறையை நாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.