சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள்! ரெட் அலர்ட் தந்த வானிலை மையம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள்! ரெட் அலர்ட் தந்த வானிலை மையம்
ADDED : அக் 16, 2024 01:58 PM

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (அக்.,16) அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று பகலில் கொட்டிய மழை, பின்னர் இரவில் படிப்படியாக குறைந்தது. சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்வதால் அதி கனமழையில் இருந்து சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் தப்பித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(அக்.16) அதி கனமழை (204 மி.மீட்டருக்கும் அதிகமாக) பெய்யும் வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர்,அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.17) மிக கன மழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.