கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? அறிக்கை கோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை
கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? அறிக்கை கோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை
ADDED : ஆக 20, 2024 02:35 AM

மதுரை: கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த தாக்கலான வழக்கில், தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு வனப்பகுதியில், 2003 முதல், புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் 2021ல் புத்துணர்வு முகாம் ஒத்திவைக்கப்பட்டது; அதன் பின் நடத்தப்படவில்லை.
யானைகளால் பிறர் கொல்லப்படுவதை தவிர்க்க புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
அங்கு, யானைகளுக்கு சரிவிகித உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்கிறது. சக யானைகளை பார்ப்பது, பழகுவதால் மனரீதியான இறுக்கம் குறைகிறது.
எனவே, கோவில்களில் உள்ள மற்றும் பிற வளர்ப்பு யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில், 'புத்துணர்வு முகாமிற்கு வாகனங்களில் யானைகளை அழைத்து வருவதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன' என தெரிவிக்கப் பட்டது.
நீதிபதிகள்: இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து, அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், வனத்துறை முதன்மைச் செயலர் செப்., 9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.