ADDED : ஏப் 30, 2024 10:14 PM
சென்னை:சென்னையில் மூன்று உட்பட, பல்வேறு மாவட்டங்களில் உள்ள எட்டு பாரம்பரிய கட்டடங்களை, 50 கோடி ரூபாயில் புனரமைப்பதற்கான பணிகளை, பொதுப்பணித் துறை துவக்கியுள்ளது.
தமிழகம் முழுதும் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட, பல பாரம்பரிய கட்டடங்கள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இதுபோன்ற பாரம்பரிய கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு அதிக செலவாகும். எனவே, இதற்கான நிதியை தமிழக அரசு பல ஆண்டுகளாக ஒதுக்காமல் உள்ளது.
பாரம்பரிய கட்டடங்களை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என்று, தொல்லியல் துறையினர் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து, பொதுப்பணித் துறையில் சிறப்பு பிரிவும் துவங்கப்பட்டது.
இப்பிரிவு வாயிலாக நடப்பாண்டில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, சேப்பாக்கம் பழைய ஆவண அறை, கிண்டி ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் நீதிமன்றம், புதுக்கோட்டை பொது அலுவலகம், கோவை வேளாண் பல்கலை ஆராய்ச்சியகம், மதுரை மாவட்ட பதிவாளர் அலுவலகம், காரைக்குடி சங்கரபதி கோட்டை ஆகிய எட்டு பாரம்பரிய கட்டடங்கள் புனரமைக்கப்பட உள்ளன.
இதற்காக தற்போது, 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.