ஓய்வூதியர்களுக்கு பண பலன் வழங்க ரூ.265 கோடி ஒதுக்கீடு
ஓய்வூதியர்களுக்கு பண பலன் வழங்க ரூ.265 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 05, 2025 04:57 AM

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றன. தமிழகம் முழுதும், 8,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் இருக்கின்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு:
கடந்த, 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும், உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கும் பணப்பலன் வழங்க, 265.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதை பரிசீலித்த அரசு, 265.44 கோடி ரூபாயை குறுகிய கால கடன் என்ற அடிப்படையில் ஒதுக்கியுள்ளது. இந்த தொகையை, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், உரியவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.