கோவை, மதுரை உட்பட 8 நகரங்கள் மேம்பாட்டுக்கு ரூ.440 கோடி நிதியுதவி
கோவை, மதுரை உட்பட 8 நகரங்கள் மேம்பாட்டுக்கு ரூ.440 கோடி நிதியுதவி
ADDED : ஜூலை 22, 2024 12:34 AM
சென்னை: தமிழகத்தில், கோவை, மதுரை, சேலம் உட்பட எட்டு நகரங்களில், முழுமை திட்ட அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, மத்திய அரசு, 440 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத்' என்ற பெயர்களில், நாடு முழுதும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களுக்கு நிதி வழங்க, மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது.
நகரங்களில் உள்ளாட்சி நிர்வாகம், போக்குவரத்து மேலாண்மை, நகரமைப்பு ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நகர்ப்புற மேம்பாட்டுக்கான பல்வேறு சீர்திருத்தங்களை, தமிழக அரசு ஏற்றுள்ளது. இதையடுத்து, எட்டு நகரங்களின் மேம்பாட்டுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மூலதன முதலீடு திட்டத்தின் கீழ், எட்டு வகையான சீர்திருத்த கூறுகள் குறிப்பிடப்பட்டுஉள்ளன.
இதன்படி, நகரங்களில் 1 ஏக்கர் பரப்பளவுக்கு நகர்ப்புற வனம் அமைக்க, தலா, 5 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக, 55 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில், கோவை, மதுரை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார் நகரங்கள் தேர்வாகி உள்ளன.
இந்த நகரங்களில் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு, போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சி, நீர் நிலைகள் பாதுகாப்பு, நில வகைபாட்டை முறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதனால், ஒரு நகரத்துக்கு, 55 கோடி ரூபாய் என, எட்டு நகரங்களுக்கும், மத்திய அரசின் ஊக்கத்தொகையாக, 440 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.