UPDATED : மே 12, 2024 06:14 AM
ADDED : மே 12, 2024 12:57 AM

சென்னை மெரினாவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பாய்மர படகு அகாடமி நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
மெரினாவில், கூவம் முகத்துவார கரையோரத்தில், ஏழு கோடி ரூபாயில் செலவில், அரசின் பாய்மர அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ஏற்படுத்த, திட்டமிடப்பட்டு உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் அறிவித்த இத்திட்டம், சில நிர்வாக காரணங்களால் நிலுவையில் இருந்தது. தற்போது, இதற்கான திட்ட அறிக்கையை,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தயார் செய்கிறது.
இத்திட்டத்தின் அனுமதிக்காக, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக, மெரினா கடற்கரையோரத்தில் 2.75 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1,250 சதுர மீட்டர் பரப்பில், இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் அமைக்கப்படுகிறது. தனியாக, படகுகள் நிறுத்தும் கொட்டகை போன்றவையும் அமைக்கப்படுகிறது. கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், பணிகளை விரைவில் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அகாடமி குறித்து பாய்மர படகு விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில் உலக தரம் வாய்ந்த பாய்மர படகு அகாடமி அமையும் போது, இவ்வகையாக விளையாட்டு வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தப்படும். பாய்மர படகு விளையாட்டை பெருத்தவரை, 7 வயதில் இருந்து பங்கேற்கலாம். மொத்தம் 10 வகையான படகுகள் உள்ளன. சென்னையின் மேலும் ஒரு அடையாளமாக, பாய்மர படகு அகாடமி திகழும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர் -