ADDED : மார் 08, 2025 12:32 AM
சென்னை:'போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள், இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்பலாம்' என, சாம்சங் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
பணி நேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, மூன்று பேரை நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது. அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும், 20 பேரும் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என, 1,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பணிக்கு திரும்புவதாகவும், அதற்கு தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் எழுத்துபூர்வமாக கடிதம் அளிக்க வேண்டும் எனவும், தொழிற்சங்கம் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து, 'போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள், இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்பலாம்' என, சாம்சங் நிர்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:
எந்த ஒரு ஆலையிலும் ஒரு பிரச்னை ஏற்பட்டால், உடனே சிறப்பு குழுவை அரசு நியமித்து, பேச்சு நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும்.
இரு தினங்களுக்குள் பிரச்னையை முடிக்க வேண்டும். அப்போது தான், தமிழக அரசின் மீது தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
கூடுதலாக முதலீடு செய்யவும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.