ADDED : மே 05, 2024 12:08 AM

தேனி:தேனி, பூதிப்புரம் சாலையில் உள்ள தங்கும் விடுதியில், யு டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார், வழக்கு தொடர்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.
அவருடன் தங்கி இருந்த அவரது டிரைவர், சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராம்பிரபு, 24, பரமக்குடியை சேர்ந்த ராஜரத்தினம், 42, ஆகியோரை போதைப்பொருள் வைத்திருந்ததாக, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டி.எஸ்.பி., பார்த்திபன் விசாரணை நடத்தினர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து, நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் வரவழைத்து சோதனை செய்தனர்.
மாலை வரை விசாரணை நடந்தது. பின்னர், இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், எந்த வகை போதைப்பொருள், மதிப்பு எவ்வளவு என, தெரிவிக்கப்படவில்லை.
போலீசார் கூறுகையில், 'சவுக்கு சங்கர், அவருடன் இருந்தவர்கள் நேற்று விஷேசத்திற்காக துாத்துக்குடி சென்றனர். பின்னர், அவர்கள் மதுரை வழியாக தேனி வந்தனர். இங்கிருந்து கொடைக்கானல் அல்லது மூணாறு செல்ல முடிவு செய்து தங்கியிருந்தனர். இந்நிலையில், வழக்கில் மூவரும் சிக்கினர்' என்றனர்.