ஆடை நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து
ஆடை நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : ஆக 15, 2024 12:27 AM
சென்னை:துணிநுால் மற்றும் ஆடை நிறுவனங்களில், பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை ஊக்குவிக்க, நேற்று முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக அரசின் சமூக நலத்துறை, கைத்தறித்துறை, ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவத்திற்கான அமைப்பு ஆகியவை இணைந்து, துணி நுால் மற்றும் ஆடைத்துறையில், பாலின சமத்துவம், மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை வலுப்படுத்த, முத்தரப்பு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.
மூன்று ஆண்டு
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று, அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் கையெழுத்தானது. இக்கூட்டமைப்பு, பெண்கள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமத்துவம் அதிகரிக்கவும், ஒரு வலுவான கட்டமைப்பை அமைக்க உதவும்.
இக்கூட்டமைப்பு பிற துறைகளுக்கு முன்மாதிரியாக அமையும்.
இத்திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில், மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
துணிநுால் மற்றும் ஆடைத் துறையில், 'பிராண்ட்' நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், அரசு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு, உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அனைத்து பங்காளர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.
சேவை மையம்
பணியாளர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகள் மற்றும் மக்கள் தொடர்பு சாதனைகளை, இத்திட்டம் உருவாக்கும். நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள புகார் குழுக்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், மகளிருக்கான அதிகாரம் அளித்தல் மையம் ஆகியவற்றின் திறன் மேம்பாட்டிற்கு உதவும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சியில், கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீமுரளீதரன், கமிஷனர் அமுதவல்லி, ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவ அமைப்பின், இந்திய நாட்டு பிரதிநிதி சூசன்பெர்கசன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.