பத்திரப்பதிவு தடையால் சார் - பதிவாளர் ஆபீஸ் முற்றுகை
பத்திரப்பதிவு தடையால் சார் - பதிவாளர் ஆபீஸ் முற்றுகை
ADDED : செப் 03, 2024 02:47 AM

அன்னுார்: கோவை மாவட்டம், அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என, 2021ல் மாநில தொழில் முதலீட்டு கழகம் அறிவித்தது.
'நமது நிலம் நமது'
விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது' என தெரிவிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி அன்னுார் மற்றும் புளியம்பட்டி சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'தொழில் பூங்காவுக்கு என அறிவிக்கப்பட்ட நிலங்களை வாங்கவோ, விற்கவோ அடமானம் செய்யவோ முடியாது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த, 'நமது நிலம் நமது' எனும் அமைப்பினர், கடந்த வியாழன்று எல்.கோவில் பாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, சார் - பதிவாளர் செல்வ பாலமுருகன், 'தொழில் பூங்கா அமைய உள்ள நிலங்களில் பத்திரப்பதிவு செய்யலாம்; தடை இல்லை' என தெரிவித்தார்.
எனினும், நமது நிலம் நமது அமைப்பினர் மற்றும் விவசாயிகள், 'எந்தவித அரசாணையும் இல்லாமல் பத்திரப்பதிவுக்கு மூன்று நாள் தடை விதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, அன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொழில் பூங்கா
துணை தாசில்தார் ரேவதி மற்றும் சார் - பதிவாளர் செல்வ பாலமுருகன் பேச்சு நடத்தினர்; அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. 'தொழில் பூங்காவுக்கு அறிவிக்கப்பட்ட நிலங்களை வாங்க, விற்க, அடமானம் செய்ய எந்த தடையும் இல்லை' என, உறுதி அளித்தனர்.
அதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.