ADDED : ஜூலை 05, 2024 10:07 PM
சென்னை:தேசிய அளவி லான இதய நோய் நிபுணர்கள் இணைந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரத்யேக மையத்தை, சென்னையில் துவக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.
தேசிய இன்டர்வென்ஷனல் கவுன்சில், இந்திய இதயவியல் நல அமைப்பின் தமிழக பிரிவு ஆகியவை இணைந்து, இதய நோய் சிகிச்சை மேம்பாடு குறித்த, நான்கு நாள் தேசிய மருத்துவ மாநாட்டை சென்னையில் நேற்று துவக்கின.
மாநாட்டில், தேசிய இன்டர்வென்ஷனல் கவுன்சில் செயலர் கேசவமூர்த்தி பேசியதாவது:
மாநாட்டில், 3,000க்கும் மேற்பட்ட இதய நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
நாடு முழுதும், 1,700க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பெறப்பட்ட, மருத்துவ சிகிச்சை முறை குறித்த தரவுகள், மாநாட்டில் வெளியிடப்பட்டு உள்ளன.
இதயவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு களுக்காக, பிரத்யேக மையம் சென்னையில் துவக்கப்பட உள்ளது. இந்த மையம் வாயிலாக, நவீன முறையில் பாதிப்புகளை கண்டறியவும், சிகிச்சை கிடைக்கவும் ஊக்கப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.