முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்: பழனிசாமி
முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்: பழனிசாமி
ADDED : மே 12, 2024 12:40 PM

சென்னை: முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தத்து ஆவணங்களுக்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளது. டூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 26 சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும். மின் கட்டணம், பால் உள்ளிட்ட விலை உயர்வு மூலம் மக்கள் தலையில் தமிழக அரசு சுமையை ஏற்றுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.