ADDED : மே 09, 2024 11:29 PM
தேனி: பள்ளி மாணவர்களின் எமிஸ் ஐ.டி.,யில் பெற்றோர் அலைபேசி எண்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு எமிஸ் ஐ.டி., கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி.,யில் மாணவர்களின் ஆதார் விவரங்கள், முகவரி, பெற்றோர் பற்றிய தகவல்கள், இருக்கும். இதனால் ஒரு மாணவர் பெயர் ஒரு பள்ளியில் மட்டும் இடம் பெறும்.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை எமிஸ் ஐ.டி., பயன்படுத்தப்படுவதால் வேறு பள்ளிகள் மாறும் போது அதே ஐ.டி., பின்பற்றபடுகிறது. இந்த ஐ.டி.,களில் மாணவர்களின் பெற்றோர் அலைபேசி எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிற்கு மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு, தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.
ஆனால் பல மாணவர்கள் தங்கள் பெற்றோர் அலைபேசி எண்களை கொடுக்காமல் வேறு நபர்களின் அலைபேசி எண்களை கொடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களின் பெற்றோர் அலைபேசி எண்களை சரிபார்த்து அதனை எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் கல்வித்தரம், பள்ளிக்கு வராமல் இருந்தால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பது சுலபமாக இருக்கும். மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்ப, சான்றிதழ் வழங்கும் தேதி பற்றி தெரிவிக்க எளிதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.