ரூ.20,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார், வி.ஏ.ஓ., கைது
ரூ.20,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார், வி.ஏ.ஓ., கைது
ADDED : ஜூலை 02, 2024 03:30 AM
பெரம்பலுார் : பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில், புதிதாக திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜ் என்பவர், பெரம்பலுார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மனுவை விசாரித்த துணை தாசில்தார் பழனியப்பன், தடையின்மை சான்று வழங்குவதற்காக 20,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டார்.
லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ், பெரம்பலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பெரம்பலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின்படி, நேற்று இரவு 7:00 மணிக்கு, மண்டப மேலாளர் துரைராஜ், பெரம்பலுார் தாலுகா அலுவலகத்திற்கு சென்று துணை தாசில்தார் பழனியப்பன் கூறியதன் படி, அங்கிருந்த கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியிடம் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெற்ற இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.