இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பொன்முடி பெருமிதம்
இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பொன்முடி பெருமிதம்
ADDED : ஜூலை 15, 2024 12:48 PM

சென்னை: 'சிறப்பான திட்டங்களால் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது' என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 22ம் தேதி துவங்குகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான விண்ணப்பம் அதிக அளவில் பெறப்பட்டுள்ளது. 2,53,954 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அக்கறை
மாணவர்கள் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ளார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் நலனில் அரசு கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது.
உயர்கல்வி
பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அறிவித்த நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்களால் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறப்பான திட்டங்களால் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.