தமிழை கைவிடும் தமிழக அரசு: ஆங்கிலத்திற்கு மாறிய அரசு பஸ் குறிப்பேடு
தமிழை கைவிடும் தமிழக அரசு: ஆங்கிலத்திற்கு மாறிய அரசு பஸ் குறிப்பேடு
UPDATED : பிப் 27, 2025 04:29 AM
ADDED : பிப் 27, 2025 02:26 AM

சென்னை: அரசு பஸ் குறிப்பேடு படிவம் தற்போது ஆங்கிலத்தில் வழங்கப்படுவது, போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன; 15,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதிர்ச்சி
தினமும் பணிமனையில் இருந்து பஸ் புறப்படும்போது, அந்த பணிமனை கிளை மேலாளர் வாயிலாக, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு, 'வண்டி குறிப்பேடு' எனும் படிவம் வழங்கப்படும்.
பஸ் வழித்தட எண், புறப்பட்ட நேரம், வந்தடையும் நேரம், ஓட்டுநர், நடத்துநர் பெயர்கள் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். அதுபோல் வழியில் ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
பஸ்சில் குறைபாடு மற்றும் பழுதுகள் ஏற்பட்டால், அந்த படிவத்தில் தெளிவாக எழுதி, அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த படிவம், பல ஆண்டுகளாக தமிழில் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, சென்னையில் மத்திய பணிமனை, அண்ணாநகர் உள்ளிட்ட பணிமனைகளில், இந்த படிவம் ஆங்கிலத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
இது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிரமம்
இதுகுறித்து, ஊழியர்கள் சிலர், போக்குவரத்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'ஹிந்தியை எதிர்த்து வரும் தி.மு.க., அரசு, பல ஆண்டுகளாக தமிழில் வழங்கிய படிவத்தை ஆங்கிலத்துக்கு மாற்றுவது ஏன்?' என, கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:
ஓட்டுநர், நடத்துநர்களில் பெரும்பாலும், பிளஸ் 2 வகுப்பு வரை படித்தவர்கள் தான் அதிகம். வண்டி குறிப்பேடு படிவத்தை, ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்வதும், பஸ்களில் ஏற்பட்ட பழுது தொடர்பாக புகார்களை ஆங்கிலத்தில் எழுவதும் அவர்களுக்கு சிரமம்.
நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம். வண்டி குறிப்பேடு படிவத்தை மீண்டும் தமிழ் மொழியில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.