கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது: சொல்கிறார் சீமான்
கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது: சொல்கிறார் சீமான்
ADDED : மே 28, 2024 12:57 PM

சென்னை: 'முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது' என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையை இடிக்கவும், புதிய அணை கட்டுவதற்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கேரள மாநில அரசு விண்ணப்பித்துள்ளது. தென் தமிழகத்தை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது.
கேலிக் கூத்து
விடுதலைக்குப் பிறகு எல்லைப் பிரிப்பின்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி நிலப்பகுதியை கேரளாவிடம் தமிழகம் இழந்தது. இந்தியக் கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயல்வது இந்திய ஒருமைப்பாட்டை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.
திராவிடம்
காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக, தமிழக உரிமை பறிபோவதை வேடிக்கைப் பார்ப்பதும், திராவிடம், திராவிடம் என்று கூறிக்கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிடம் பறிபோகும் தமிழக உரிமையைப் பெற முடியாமல் மாறி மாறி மண்டியிட்டு அடிபணிவதும் வெட்கக்கேடானதாகும்.
புதிய அணை
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தைத் துவங்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.