'வீம்புக்கு விளக்கெண்ணெய் குடிக்கக்கூடாது தமிழக அரசு'
'வீம்புக்கு விளக்கெண்ணெய் குடிக்கக்கூடாது தமிழக அரசு'
ADDED : ஆக 29, 2024 10:12 PM
சேலம்:''இந்தி திணிப்பு என, தி.மு.க., அரசு, நாடக அரசியலை அரங்கேற்றுகிறது,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டம், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது. அதில் இணைத்துக் கொள்ள தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், தற்போது மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம், நிதி மட்டும் தர வேண்டும் என அடம் பிடிப்பது எந்த வகையில் நியாயம்?
புது கல்வி கொள்கையில் மாநில மொழியே பயிற்று மொழி. அதாவது தமிழகத்தில் தமிழ் தான் பயிற்றுமொழி. ஆங்கிலம் இணைப்பு மொழி. மூன்றாவதாக, மாநில மொழி என குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கும் ஹிந்தி கட்டாயம் என கூறப்படவில்லை. இதில் ஹிந்தி திணிப்பு என, தி.மு.க., அரசு, நாடக அரசியலை அரங்கேற்றுகிறது.
தமிழகத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் வாழ, வணிகம் செய்ய, அரசு பணிகளில் சேர, தொழில் தொடங்க உரிமை உண்டெனில் அவர்கள் தாய்மொழியை கற்றுத்தரும் உரிமையை, தி.மு.க., அரசு எப்படி தடுக்கலாம்?
வீம்புக்கு விளக்கெண்ணெய் குடிக்காமல் தெலுங்கு மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தெலுங்கை, 3வது மொழியாகவும், கன்னடர்கள் அதிகம் உள்ள பகுதியில் கன்னடத்தை, 3வது மொழியாகவும் கற்றுத் தந்து, கல்வி தரத்தை மேம்படுத்த, தமிழக பா.ஜ., சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதை ஏற்றால் தமிழகத்துக்கு உரிய நிதியை பெற்றுத்தர, தமிழக பா.ஜ., முயற்சி எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.